#Tanjore MPs Demand..
தஞ்சாவூர்-சென்னைக்கு பகல்நேர அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் அதிமுக எம்பி நேரில் மனு
தஞ்சாவூர் - சென்னை இடையே பகல்நேர அதிவிரைவு ரயிலை இயக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.பரசுராமன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தில்லியில் அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை நேரில் சந்தித்த அவர், தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள் தொடர்பான முன்மொழிவை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு புதிதாக பகல் நேர அதிவிரைவு ரயிலை இயக்க வேண்டும். தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை இடையே புதிதாக அகல ரயில் வழித்தடம் அமைக்கவும், பட்டுக்கோட்டை - மன்னார்குடி பாலப் பணியை விரைவுபடுத்தவும் நடவடிக்கை வேண்டும். பேராவூரணி மற்றும்...
more... புதுக்கோட்டை வழியாக காரைக்குடி - திருவாரூருக்கு அகலப் பாதைப் பணியை விரைவுபடுத்த வேண்டும். தஞ்சாவூர்-அரியலூர் வழித்தடத்தில் புதிதாக அகலப் பாதை அமைக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டைக்கு தஞ்சாவூர் வழியாக தாற்காலிகமாக இயக்கப்படும் ரயிலை வணிகர்கள், விவசாயிகள், அலுவலகம் செல்வோர், தினக்கூலி தொழிலாளர்கள், மாணவர்கள் நலன் கருதி நிரந்தரமாக இயக்க வேண்டும்.தஞ்சாவூர்- ஆலக்குடி இடையே உள்ள ரெட்டிபாளையத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும். கும்பகோணம், சிதம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பதி, புணே, மும்பை வழியாக செல்லும் வகையில் தஞ்சாவூர்- மும்பை அதிவிரைவு ரயிலை இயக்க வேண்டும். அதேபோன்று, திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பழனி வழியாக தஞ்சாவூர்- கோயம்புத்தூருக்கு புதிய ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். மேற்கண்ட ரயில் வழித்தடங்கள் வழியாக பழனிக்கு ரயில் சேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, முன்னாள் குடியரசுத் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ராமேசுவரத்தில் இருந்து மன்னார்குடி, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்னை வரை செல்லும் வகையில் பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மின் படிக்கட்டுகள் வசதி ஏற்படுத்த வேண்டும். திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர், நீடாமங்கலம், அதிராமபட்டினம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். பூதலூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூர் - திருச்செந்தூர், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து பரசுராமன் எம்.பி. செவ்வாய்க்கிழமை கூறுகையில், "தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தொடர்புடைய 23 கோரிக்கைகளை ரயில்வே அமைச்சரிடம் முன்வைத்துள்ளேன். அவற்றில் பூதலூரில் ரயில் நின்று செல்லவும், தஞ்சை - சென்னை இடையே பகல்நேர அதிவிரைவு ரயில் விடக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. நான் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். மேலும், தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்துது, நகரும் மின் படிக்கட்டுகள் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். தஞ்சாவூர்- திருச்சி இரட்டை அகலப் பாதை திட்டப் பணிகளையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்'என்றார்