முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பு தஞ்சை- திருச்சி பயணிகள் தவிப்பு
2017-03-15 10:46:41
தஞ்சை: திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத இருக்கை பெட்டிகளை குறைத்ததால் பயணிகள் தவித்து வருகின்றனர். இதனால் பெட்டிகளை அதிகரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சைக்கு 10.30 மணிக்கு வரும். தஞ்சை ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நின்ற பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்றடையும். அதேபோல் சென்னையிலிருந்து 8.45 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 2.45 மணிக்கு தஞ்சை ரயில்வே ஸ்டேசனுக்கு வரும். 5 நிமிடத்துக்கு பின்னர் தஞ்சையிலிருந்து புறப்பட்டு திருச்சிக்கு சென்றடையும். திருச்சியிலிருந்து புறப்பட்டு பூதலூர், தஞ்சை, கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய ரயில்வே நிலையங்களில்...
more... நின்று செல்கிறது. இவ்வாறு தினம்தோறும் இயங்கும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பக்கம் 2 பெட்டிகளும், பின்பக்கம் 2 பெட்டிகளும் என்று 4 பெட்டிகள் முன்
பதிவு இல்லாத இருக்கைகள் இருக்கும். சில நேரங்களில் 5 பெட்டிகள்கூட முன்பதிவு இல்லாத இருக்கைகள் இருக்கும். இதனால் திருச்சியிலிருந்து சென்னை வரை உள்ள ரயில் நிலையங்களுக்கு காலை நேரங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. குறிப்பாக பஸ்களில் பயணம் செய்யும் நேரத்தைவிட குறைவான நேரத்தில் பயணம் செய்வதுடன் கட்டணமும் குறைவாக இருக்கிறது.
இதனால் திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு பயணம் செய்யும் ஏழை பயணிகள் இந்த ரயிலை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத இருக்கை பெட்டியின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பின்றி பெட்டிகள் குறைக்கப்பட்டதால் தினம்தோறும் இந்த ரயிலை நம்பி பயணம் செய்யும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, தினம்தோறும் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு காலை நேரத்தில் வேலைக்கு வந்து செல்கிறேன். முன்பதிவில்லாத இருக்கை பெட்டியில் அமர்ந்து வருவேன். கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென முன்பதிவு இல்லாத இருக்கை பெட்டியின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு வருகிறது. இதனால் நிறைய பயணிகள் வர முடியவில்லை. சில நேரங்களில் படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக அமையவுள்ளது. பயணிகளை காக்க வேண்டிய ரயில்வே நிர்வாகம் இப்படி உயிரை காக்க மறந்துவிட்டது. இது திருச்சியிலிருந்து தஞ்சை வரையிலான பயணம் மட்டுமே. எனவே ரயில்வே பயணிகள் நலன்கருதி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்புபோல் அதிகளவில் முன்பதிவு இல்லாத இருக்கை பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்றனர்.